கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள்.
இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
அணையா? நீர்த்தேக்கமா? :
தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நீர்வளத்துறை ஆகியவற்றுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியது.
காவிரியின் பயன்பாடு:
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியும் சேர்த்து சுமார் 28 இலட்சம் ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை, நிலக்கடலை, உளுந்து, பயிறு, சோளம் முதலியவை காவிரி நீரால் உற்பத்தியாகின்றன.
வேளாண்மைக்கு மட்டுமல்லாது குடிநீராகவும் பயன்படுகிறது. சென்னையிலிருந்து -இராமேசுவரம் வரை, காரைக்காலிலிருந்து -திருப்பூர் வரை, 21 மாவட்டங்களுக்கு நிலத்தடி நீரும் காவிரி நீரால் தான் சுரக்கிறது. காவிரி நீர் நிலத்தின் மேல் ஓடவில்லை எனில், தேங்கவில்லை எனில் நிலத்தடி நீரும் அற்று விடும்.
சட்டவிரோதமான அனுமதி :
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு பகுதி XI மற்றும் XVIII ஆகியவை தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகம் புதிய அணை கட்டக் கூடாது என்று வரையறுத்துள்ளது.
தற்போது கர்நாடகத்தின் சட்ட விரோத மேக்கேதாட்டு அணைக்கு நரேந்திர மோடியின் ஆட்சி அனுமதி கொடுத்துள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் 22.11.2018 அன்று கர்நாடக அரசைக் கேட்டுள்ளது.
வெள்ள நீர்:
வெள்ள சமயங்களில் தங்கள் அணைகளை பாதுகாத்து கொள்ள திறந்து விடப்படும் உபரி நீர் தான் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு கிடைக்கிறது. இந்நிலையில் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்தை நாம் அனுமதித்துவிட்டால் உபரி வெள்ள நீரும் 67.14 டி.எம்.சி கொண்ட மேக்கேதாட்டுவில் முழுவதுமாக சேமிக்கப்படும். நமக்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு சமவெளி பாலைவனமாக மாறி விடக்கூடும்.
இறுதியாக, கர்நாடகாவில் அரசியல் இலாபங்களுக்காக அதிகார வர்க்கங்கள் களமாடும் நிலையில் விவசாயிகளின் போராட்டமாக சுருங்காமல் வெகுஜன மக்களின் போராட்டமாக வலு பெறுவதே உரிமைகளை பாதுகாக்க ஒரே வழி!
உறுதியாக மக்கள் போராட்டமே எதை ஒன்றையும் மாற்றக்கூடியது.
உறுதியாக மக்கள் போராட்டமே எதை ஒன்றையும் மாற்றக்கூடியது.
‘காவிரி நீர் உயிர் நீர்’
‘காவிரி எங்கள் பிறப்புரிமை’
‘காவிரி எங்கள் பிறப்புரிமை’
-A.H.M ஹமீது ஜெகபர்,
